Monday 23 February, 2009

அய்க்கூ அந்தாதி

அய்க்கூ அந்தாதி என்ற வகையில் இக்கவிதை.(அதாவது ஒரு அய்க்கூ கவிதையின் முடிவில் இருந்து மற்றொரு அய்க்கூ கவிதை தொடர்வது)

காகம் கரைந்தது
அழைப்பா தகவலா
விருந்தினர் வருகை
*************

விருந்தினர் வருகை
இருப்பு கொள்ளவில்லை
வறுமை

**********

வறுமையால்
ஆடைகுறைத்தால் சேரிப்பெண்
வசதிக்காக நடிகை
**********

நடிகையின் காதல்
கலைந்தது
ஒப்பனைப்போல்
********

ஒப்பனைப்போல் அல்ல
உண்மைதான்
அந்திச் சிவப்பு
**********

சிவப்பாகிப் போனது தேசம்
சோசலிச கொள்கை காரணமல்ல
வன்முறை
********

வன்முறையை போதிக்கிறதோ
அய்யனார் கையில்
அறுவாள்.

- ஜெ.அன்புமணி

Monday 16 February, 2009

அய்க்கூ கவிதைகள்.



கட்டுமானத்தொழில் செய்துவரும் எனது மற்றொரு நண்பர் ஆர்.எஸ்.நாதன், இங்கே அவரின் கவிதையை க(கா)ட்டியிருக்கிறார். உங்கள் கருத்தை கொட்டுங்கள்!

நிறைய நிறைய அர்த்தங்கள்
நீசொன்தென்ன?
சைகையில் சொன்ன செய்தி

*************

தொடாமலே பேசிக்கொண்டிருக்கையில்
அவள் கண்ணில் விழுந்த தூசி
காற்றுக்கு நன்றி!

*************

வேறுபெயரில் வாழ்த்து
தெரியாமலா போகும்
உன் கையெழுத்து..

**************

உனக்கான காத்திருப்பு
இலையைகிள்ளும் வேளையில்
யார் யாரோ உன் சாயலில்.

- ஆர்.எஸ்.நாதன்,கும்பகோணம்
.

Friday 13 February, 2009

காதல் வனத்துக் கற்பகப் பூக்கள்!


காதலர்தினத்தை முன்னிட்டு என் நண்பனின் சிறப்பு கவிதை உங்கள் பார்வைக்கு!

நில்!

யார் உன்னை
அனுமதித்தது
இந்த காதல் வனத்துள்?

காடுகமழச் சிரிக்கும்
நாங்கள்
கற்பகப்பூக்கள்!

முன்பொருநாள்
மோனத்தவமிருந்து
வேண்டிநின்றோம்

எம்
காம்பினைக்கொய்ய
காதலர்க்கரம்
வேண்டுமென்று.

சீழ்நாறும்
உன்
ரோகவிரல்களால்
தீண்டாதே.

காதலின் ஸ்பரிசமே
எங்கள்ஆடை

உன்
மேனியில் கனப்பதோ
பொருளாதாரப்போர்வை.

நறுமணமே
எங்கள் பாடல்.

உனக்கோ
பேயுதட்டு பாசை.

எங்கள் இதழ்களின்
மினுமினுப்பில்
தேவமகரந்தம்

உன்
அங்கம் முழுக்க
சாதியச்சகதி.

புனிதத்தின் கருப்பையில்
பூத்தவர்கள் நாங்கள்!

நீயோ
மதங்களின் காலடியில்
மண்டியிடுகிறாய்.

எம்
நிழல் தீண்டும் தகுதியும்
உனக்கில்லை
போய்விடு!

பூமிக்கு வெளியே
காத்திருக்கிறது
உனக்ககான கல்லறை.
- கோ.பாரதிமோகன்.

Thursday 12 February, 2009

இன்றும் ஒரு கவிதை...

இன்றும் ஒரு கவிதை...
உங்கள் பார்வைக்கு...

Wednesday 11 February, 2009

கவிதை.


தண்ணீர் தெளித்து
பெருக்கி
புள்ளிவைத்து
குறுக்கு நெடுக்காக
கோட்டை இழுத்து
நிமிர்ந்து நின்று
ரசித்துப்பார்த்தாள்

நெஞ்சம் முழுக்க
நிறைந்திருந்தது
'அவள்' கோலம்!

Thursday 5 February, 2009

நான் கடவுள் - ஒரு பார்வை.

"நான்' என்ற எண்ணம் கொண்ட மனிதர் வாழ்ந்ததில்லை' என்றொரு பாடல் தமிழில் உள்ளது. கலைஞர்கூட ஒரு சிறு கவிதை எழுதியிருக்கிறார். (மாநகர பேருந்துகளில்கூட பார்த்திப்பீங்களே!) நான், நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது. 'நாம்' என்று சொன்னால் உதடுகள்கூட ஒட்டும் என்று.
நான் என்ற சொல் அகங்காரத்தை குறிக்கும். நாம் என்ற சொல்லே ஒற்றுமையை குறிக்கும். நான், நீ என்று விலகி நிற்காமல் நாம் என்றும் ஒற்றுமையாய் இருப்போம்.

அடுத்து...கடவுள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பெரிய கேள்வி. இருக்கிறார் என்பாரும் இருக்கின்றார். இல்லையென்பாரும் இருக்கின்றார். கல்லை நட்டு வைத்தாலே கையெடுத்து கும்பிட இங்கே ஆட்கள் நிறைய உண்டு. கடவுள் பெயரைச் சொல்- ஏமாற்றுவோரும் உண்டு. அவர் பெயரைச் சொல்- நன்மைகள் செய்வோரும் உண்டு.
நாம்தான் பகுத்தறிந்து செயல்படவேண்டும்.
இன்னும் விரிவா சொல்லனும்னு ஆசை... சரி ரொம்ப மொக்கை போட வேண்டாமேன்னு இத்தோட நிறுத்திக்கிறேன்.

Sunday 1 February, 2009

பியுன் கோபால் (சிறுகதை)

அலுவலகம் நேரமான பத்துமணிக்கு முன்பாகவே எப்போதும் வந்துவிடும் வழக்கத்தை வைத்திருப்பவன் சுந்தர். அவனுக்கும் முன்பாக வந்துவிடுவார் பியுன் கோபால். இன்னும் சில மாதங்களில் ஓய்வுப் பெறப்போகிறவர். சுந்தருக்கு அவரின்மேல் அபாரமான மதிப்பு வைத்திருந்தான். வயதில் குறைந்தவர்கள்கூட அவரை 'கோபால்' என்றே அழைப்பார்கள். குமுதம், விகடன், டிபன், சாப்பாடு வாங்கச் சொல்வதி-ருந்து, சினிமா டிக்கெட் வரை அவரவரர்களின் சொந்த வேலையையும் வாங்கிவிடுவார்கள். இவன் மட்டும் "அய்யா' என்று மரியாதையாக அழைப்பான். எந்த வேலையையும் சொல்ல மாட்டான்.
அவரே பல சமயங்களில் இவனிடம் வந்து, "ஏதாவது வேணும்னா சொல்லு சார்...' என்பார்.ஆனாலும் எதுவும் வாங்கிவரச் சொல்ல மாட்டான். அதனாலேயே இவன்மீது அவருக்கும் ஒரு மரியாதை இருந்தது.
அப்படிப்பட்ட கோபால்மீது கடந்த சில நாட்களாகவே அலுவலக ஊழியர்கள் அனைவரும் குற்றப் பத்திரிகை வாசித்தார்கள். விஷயம் இதுதான்... யார் என்ன வேலை சொன்னாலும் செய்து வந்தவர் இப்போதெல்லாம் யார் என்ன வேலை சொன்னாலும் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலை மட்டும் சொல்லுங்க. செய்யறேன். வேற எந்த வேலையும் செய்யமுடியாது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்ல ஆரமிபித்துவிட்டார் என்பதுதான் அது.
சுந்தருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் என்ன ஆச்சு இவருக்கு? நல்லாத்தானே இருந்தாரு? பணி ஒய்வுப் பெற இன்னும் சில மாதங்களே இருக்கையில் இப்படி கெட்டப் பேரை சம்பாதித்துக் கொள்ளலாமா? அவருக்கு நல்லவிதமாக விழா செய்து அனுப்பனும் என்று பேசிவந்தவர்கள்கூட, இவரின் அதிரடி நடவடிக்கையால் அப்படியே மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சுந்தரால் இதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. காரணம் என்னவென்று கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான். அவரை அழைத்து "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கேண்டின் பக்கம் வாங்க.'' என்று அழைத்தான்.அவரும் "சரி என்று தலையாட்டிவிட்டு நடந்தார்.அலுவலகத்திற்கருகில் உள்ள கேண்டினில் சொற்பமாய் கூட்டம் இருந்தது. அருகில் இருந்த வேப்பமரத்தடியில் போய்நின்றார்கள் இருவரும்.
"என்ன சார் பேசணும்?'' என்றார் கோபால்.
"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது. என்ன ஆச்சு உங்களுக்கு... அலுவலகத்தில எல்லாருகிட்டயும் நல்லப் பேரை எடுத்திருந்தீங்க... இப்ப இப்படி... ஏன் மாறிட்டீங்க.... எனக்கே மனசு கஷ்டமா இருக்கு....'' என்றான் சுந்தர்.
"எனக்கும் கஷ்டமாதான் தம்பி இருக்கு. ஆனா வேற வழி தெரியல....'' என்றார்.
"நீங்க சொல்றது எனக்கு புரியல... ஒய்வுப் பெறப்போகும் சமயத்தில இப்படி ஒரு கெட்டப் பெயரோட போகலாமா...'' என்றான் சுந்தர்.
"ஓய்வுப் பெறப்போறதாலதான் தம்பி இப்படி நடந்துக்கிறேன்.'' என்று சொன்னவர், கண் கலங்கினார்."" என்ன சொல்றீங்க... ஏன் கண்கலங்கிறீங்க...?''
"தம்பி, உன்கிட்ட சொல்றதுக்கென்ன... நான் இந்த அலுவலகத்தில முப்பது வருமா வேலை செய்யுறேன். யார் என்ன வேலை சொன்னாலும் வயசு வித்தியாசம் பார்க்காம செய்வேன். இதோ எனக்கு வயசாயிடுச்சுன்னு அனுப்பப் போறாங்க... எனக்குப் பின்னாடி யார் வேலைக்கு வருவாங்கன்னு தெரியாது. அவரும் என்ன மாதிரியே யார் என்ன சொன்னாலும் செய்வாரான்னு தெரியாது. வர்றவன் அப்படி செய்யலான்னா... எப்பப் பார்த்தாலும் என் பேரைச் சொல்- அவரு அப்படியெல்லாம் வேலை செய்வாரு... நீ என்னன்னா இப்படி இருக்கியேன்னு வந்தவனை சதா குற்றம் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.... ஆனா நான் இப்படி நடந்திக்குறதால இப்ப எல்லாரும் என் மேல வெறுப்பா இருக்காங்க. புதுசா வர்றவன் சின்ன வேலை செய்தாலும் அவனை எல்லாரும் பாராட்டுவாங்க. அதனாலதான் தம்பி....'' என்றார்.
"நல்லாருக்கு நீங்க சொல்றது நல்லவா இருக்கு.... வர்றவன் நல்ல பேரு வாங்குறதுக்காக, நீங்க ஏன் கெட்ட பேரை எடுக்கிறீங்க...?''
"என்ன பத்தி எத்தனை நாள் பேசப் போறாங்க.... வர்றவன்தானே இந்த ஆபிஸ்ல நீடிச்சிருக்கப் போறான்... எந்த விஷயமா இருந்தாலும் என் மனசாட்சிப்படி நடந்துகிறேன். இந்த விஷயத்தில நான் உறுதியா இருக்கேன். தயவு செய்து இதைப் பத்தி சோம வேற பேசலாமே...'' என்றார் கோபால்.
சுந்தரால் என்ன சொல்வதென்றே தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.

தமிழ்99 எழுதி

தமிழில் தட்டச்சு செய்ய...