ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடிக்கும் ராணா திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. அப்போது உடலில் நீர்ச்சத்து குறைந்ததால் ரஜினிகாந்துக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் புதன்கிழமை மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்தை மருத்துவ மனையில் 2 நாள்கள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர் என்று ரஜினிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்ற மாதம் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களித்த விவகாரம் பெரிதும் பேசப்பட்டதும், அன்று மாலை நடைபெற்ற பொன்னர் சங்கர் திரைப்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருந்ததையும் தமிழக மக்கள் அறிவார்கள்.
இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட விண்ணைத்தாண்டி வருவாயா, மதராச பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், மைனா ஆகிய படங்கள் 100 நாட்கள் ஓடியதை தொடர்ந்து . இந்த 4 படங்களின் வெற்றி விழா மே 7 ஆம் திகதி ரஜினிகாந்த் தலைமை தாங்கி திரைக்கலைஞர்களுக்கு கேடயம் வழங்கவும் ரஜினி சம்மதித்திருந்தார்.
ஆனால் இப்போது மே 7ஆம் தேதி நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் கலந்துகொள்வது நிச்சயமற்றநிலை நிலவுகிறது. இதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதற்கும் சம்மந்தம் இல்லை என்றே நம்புவோம்.அவர் பூரண குணம் அடைய பிரார்த்திப்போம்.


