Sunday, 20 June 2010
காதல்
"டேய்... நீயே சொல்லிட்டியே... அவ போடுற டிரஸ், மேக்கப்... இதெல்லாம் பார்த்து நானும் ரொம்ப ரசிச்சிருக்கேன். ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்கிற தகுதி எனக்கில்லைப்பா... காதலுக்கு கண்ணில்லாம கூட இருக்கலாம்... அந்தஸ்து... இதுக்கு முன்னால காதல் கசந்துரும்டா... பேசாம அவ அழகை மட்டும் ரசிச்சிக்கிட்டு போயிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான். இன்னைக்கு எனக்கு அவ தேவதையா தெரியலாம்... அவளுக்கும் நான் ராஜகுமாரனா தெரியலாம்.. கல்யாணத்துக்குப்பிறகு... நடைமுறை வாழ்க்கையில செட்டாகுதுடா... எனக்கேத்த ஒருத்தி இந்த உலகத்துலே பிறந்திருக்காமயா போகப்போறா'' என்றான் தீர்க்கமாய்!
Thursday, 10 June 2010
ஒரு வினாடிக் கதை
''என்ன போன காரியம் என்ன ஆச்சு? நல்லபடியா முடிஞ்சிதா...''
''பத்திரப் பதிவு அலுவலகத்திலே இன்னைக்கு யாருமே லஞ்சம் கேக்கலை. எல்லாரும் திருந்திட்டாங்களா? ஆச்சரியமாயிருக்குடி'' என்று மனைவியிடம் சொன்னபடி சட்டையைக் கழற்றினார் அப்பா.
''அப்பா...நீங்க பத்திரப்பதிவு செய்யப்போறீங்கன்னு தெரிஞ்சதால, நான்தான் அந்த ஆபீசுக்கு போன் பண்ணி இன்னைக்கு உங்க அலுவலகத்துக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் வராங்க... கவனமா இருங்கன்னு போன் பண்னேன்... ''
என்றாள் மகள் செல்வி.
தந்தை எதுவும் சொல்லத் தோன்றாமல் மகளை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.
Sunday, 6 September 2009
பயணத்தில் ஓர் நாள்...
“அடடே... சதா எப்படி இருக்கே வா... வா... உட்காரு” என்றவாறு சற்று நகர்ந்து இடம் கொடுத்தார்.
“நல்லா இருக்கேன்டா...” என்று புன்னகைத்தவாறு அமர்ந்தார் சதா என்கிற சதாசிவம். ராஜாராமனின் பால்ய கால நண்பர்.
“எவ்வளவு நாளாச்சு உன்னைப் பார்த்து. ஆமா வீட்டில எல்லாம் எப்படி இருக்காங்க...” என்று ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.பேச்சு குழந்தைகள் பற்றி திரும்பியது.
“உனக்கு பெண் குழந்தைதானே... கல்யாணம் ஆகிடுச்சா?”
“அதை ஏன்டா கேட்கிற நானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இன்னும் அமையல... நீ ஏதாவது நல்ல இடமாயிருந்தா சொல்லேன். இருபது பவுன் போடலாம். கல்யாண செலவை பாதி செய்யுறேன். நகையெல்லாம் ரெடி பண்ணி வைச்சிட்டேன். எல்லாம் தாயாராத்தான் இருக்கு. மாப்பிள்ளை மட்டும் அமைஞ்சிட்டா அடுத்த முகூர்த்தத்திலேயே முடிச்சிடலாம்.”
“அவ்வளவுதானே... கவலையை விடு. உன் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச மாதிரிதான். நீ எதிர்பார்த்த மாதிரியே ஒரு நல்ல இடம் இருக்கு. அவங்களும் பொண்ண தேடிக்கிட்டிருக்காங்க. நீ சரின்னு சொன்னா, வர்ற ஞாயிற்றுக் கிழமையே அழைச்சிட்டு வர்றேன். போதுமா?”
“ரொம்ப சந்தோஷம்டா சதா... வர்ற ஞாயிற்றுக்கிழமை வேண்டாம். சனிக்கிழமை நாங்க குடும்பத்தோட திருப்பதி போறோம். திங்கட்கிழமைதான் வருவோம். அதனால அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லு. உன் மூலமா இந்த வரன் அமைச்சா அதைவிட பெரிய சந்தோசம் வேற இல்ல...”
“சரி உன் அட்ரஸ், போன் நம்பர் சொல்லு. முன்னாடியே தகவல் கொடுத்துட்டு அழைச்சிட்டு வர்றேன்” என்றார்.ராஜாராமன் சொல்ல, சதாசிவம் குறித்துக்கொண்டார்.
“சரி நான் வர்றேன் ராஜா. இங்க பல்லாவரத்தில ஒரு நண்பரை பார்க்க வேண்டியிருக்கு”என்று இறங்கிக் கொண்டார்.
திங்கட்கிழமை திருப்பதி போய்விட்டு திரும்பி வந்த ராஜாராமன் அதிர்ந்து போனார். வீட்டின் பூட்டு உடைக்கப்ப்ட்டு கிடந்தது. பரபரப்புடன் உள்ளே ஓடினார். பீரோ திறந்து கிடந்தது. நகைகள் அனைத்தும் களவாடப்பட்டிருந்தது. அதிர்ச்சியில் அப்படியே உட்கார்ந்துவிட்டார் ராஜா ராமன்.
Sunday, 19 July 2009
அம்மா

பிரசவம் முடிந்து ஒரு மாதம் கழித்து இப்போதுதான் மனைவியும் குழந்தையும் வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். குழந்தை பிறந்தபோது பார்த்தது. ஒரு மாதம் பார்க்காமல் இருந்ததே மிகக் கொடுமையாகத்தான் இருந்தது.
அந்த பிஞ்சு விரல்கள், எதையும் புதிதாக ஆர்வத்துடன் பார்க்கும் விழிகள்... சிரிக்கும்போது குழிவிழும் கன்னங்கள்... பார்க்க பார்க்க ஆசையாகத்தான் இருந்தது.
மனைவிக்கு பிரவசவலி எடுப்பதாக சொல்லவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டார்கள். அப்போதே போன் செய்து எனக்கும் சொல்லிவிட்டார்கள். நானும் அவசரமாக விடுப்பு எடுத்துக் கொண்டு சென்றால், அங்கு டாக்டர்கள் இது பொய் வலி. வீட்டிற்கு அழைத்துப் போங்கள் நன்கு வலி எடுத்தால் வந்தால் போதும் என்க, என் மனைவிக்கு பயம். முதல் பிரசவம் அல்லவா. 'இல்லை நான் இங்கேயே இருக்கேன்' என்றாள். அவள் பயப்படுவதைப் பார்த்ததும் அனைவரும் சரி என்றார்கள்.
இரண்டு நாட்கள் கழித்தே குழந்தை பிறந்தது. அதனால் விடுப்பு நாட்கள் எடுத்ததையும் தாண்டி இருக்கும்படி ஆகிவிட்டது. குழந்தை பிறந்த மறுநாள் சொல்லிக் கொண்டு உடனே வேலைக்கு வந்துவிட்டேன்.
குழந்தை ஆசை தீர கொஞ்சிக் கொண்டிருந்தேன். அப்போது சிறுநீர் கழிக்க, 'அய்யய்ய' என்றவாறு மனைவியை கூப்பிட்டேன். மனைவி வேகமாக வந்து, 'என்ன உச்சா போய்ட்டான். அவ்வளவுதானே? இதுக்கு போய் என்ன முகத்தை சுழிக்கிறீங்க என்னமோ 'கக்கா' போன மாதிரி?' என்றாள்.
நான் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றேன். பிரவசத்துக்குப் பிறகு இவளே ரொம்ப மாறிவிட்டிருப்பதை உணர்ந்தேன்.
குழந்தைக்கு துணி மாற்றிவிட்டு அவள் சென்ற சிறிது நேரத்தில் அவள் சொன்ன மாதிரி கக்கா போய்விட்டான். 'சுந்தரி நீ சொன்ன மாதிரி கக்காய் போய்ட்டான்' என்றேன்.
திரும்பவும் வந்து துணி மாற்றிச் சென்றாள். மணியாகிவிட்டதை உணர்ந்து அலுவலகத்துக்கு கிளம்பினேன்.
வேலை முடிந்ததும் எப்போதும் நண்பர்களையெல்லாம் சந்தித்துவிட்டு தாமதமாக வீடுவரும் நான், இன்று குழந்தையை கொஞ்சுவதற்காகவே அவசர அவசரமாக வந்து சேர்ந்தேன். மனைவி என்னை வித்தியாசமாக பார்த்தாள்.
இரவெல்லாம் குழந்தை அழுதபடியே இருந்தது.'என்னடி குழந்தை தூங்காம அழுதுகிட்டே இருக்கு' என்றேன்.
'இராத்திரியில பிறந்த குழந்தைங்க அப்படித்தான் இராத்திரி எல்லாம் முழிச்சிக்கிட்டிருக்கும். பகல்லதான் தூங்கும். நீங்க வேணும்னா ஹால்ல போய் தூங்குங்க. நான் பார்த்துக்கிறேன்.' என்றாள்.
இது எனக்கு புது தகவலாக இருந்தது. வேலைக்கு செல்லவேண்டுமே என்பதால் ஹாலில் வந்து படுத்துக் கொண்டேன். ஆனாலும் குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டுதான் இருந்தது. நான்கூட இராத்திரியில்தான் பிறந்தேன் என்று அம்மா சொல்லியது ஞாபகத்திற்கு வந்தது. அப்போ அம்மாவும் இப்படித்தான் கண்முழிச்சி கஷ்டப்பட்டிருப்பாளோ? சிந்தனைகள் எங்கெங்கோ சென்றது.
'மாசத்துக்கு ஒரு தடவையாவது வந்து முகத்தை காண்பிச்சிட்டு போடா' -அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. இந்த வாரம் அம்மாவைப் போய் பார்த்துவிட்டு வருவதுதான் முதல் வேலை என்று நினைத்துக் கொண்ட பிறகுதான் நிம்மதியாக தூக்கம் வந்தது.
Friday, 10 July 2009
அவன், அவள், அது (உயிரோடை சிறுகதைப் போட்டிக்ககாக எழுதப்பட்டது)
அப்போதே அவளுக்கு சற்று கலக்கமாகத்தான் இருந்தது. நாம் அடியெடுத்து வைக்கும் இடம் எப்படி இருக்குமோ என்று. அம்மா, அப்பாவை சின்ன வயதிலேயே இழந்தவள். அண்ணனின் தயவில் அண்ணியின் திட்டுக்களில் வளர்ந்தவள். இப்போது மாப்பிள்ளை பற்றி சொன்னால் போதும் அண்ணி சாமியாடிவிடுவாள் என்பதால் என்ன இருந்தாலும் பேசி சரி பண்ணிக் கொள்ளலாம் என்ற தைரியத்தில்தான் கழுத்தை நீட்டினாள்.
"பால் சாப்பிடுறீங்களா?"
சிகெரட்டை கீழே போட்டு மிதித்துவிட்டு அவளருகில் வந்தான். "இதோ பாரு... நீ என்னன்வோ கற்பனைப் பண்ணிக்கிட்டு இங்க வந்திருப்பே.... இங்க அப்படி எதுவும் நடக்காது. நான் ஒரு பெண்ணை தீவிரமா காதலிச்சேன். அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்கிறதாகவும் இருந்தேன். ஆனா, நடக்கல. என் வாழ்க்கையில அவளுக்கு மட்டும்தான் இடம். உன்மேல காதல் இல்லாம, விருப்பம் இல்லாம உன்கிட்ட உறவு வைச்சிக்க முடியாது. நான் காமந்தரன் இல்ல. வாழ்க்கையை அனுபவிக்கணும்னா காதலிக்கணும். காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செய்யணும். அந்த அனுபவமே வேற. அவ கிடைக்கலைங்கிறதுக்காக உன்னைக் காதலிக்கவும் முடியாது. என் நிலைமையை புரிஞ்சிக்க."
படபடவென்று பேசி முடித்தவனை பார்த்து திக்கித்து நின்றாள். இது பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய விசயமல்ல. இவனிடம் அதிகப்படியான அன்பு செலுத்தித்தான் மாற்றணும் என்று புரிந்து கொண்டாள். மாற்ற முடியுமா என்று மலைப்பும் வந்தது.
கட்டிலில் கிடந்த தலையணையில் ஒன்றை எடுத்துக் கொண்டு கீழே பெட்ஷீட்டை விரித்து படுத்துக் கொண்டாள்.
அவளிடமிருந்து எந்தவித எதிர்ப்பும், பதிலும் இல்லாததைக் கண்டு அவனுக்கே ஒருமாதிரியாகத்தான் இருந்தது. எவ்வளவு அதிர்ச்சியான தகவலைச் சொல்லியிருக்கிறேன், ஒருவித ரியாக்சனும் இன்றி இருக்கிறாளே...
பொழுது விடிந்தது. முதலிரவில் நடந்ததை எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தாள். அவராக சொன்னாலன்றி எதுவும் கேட்கக்கூடாது என்று மனஉறுதியுடன் இருந்தாள். அவனுக்கு என்னென்ன பிடிக்கும் என்று மாமியாரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
திருமண விடுப்பு முடிந்து அலுவலகத்திற்கு சென்றான். மதியம் சாப்பாடு எடுத்துக் கொண்டு சென்றாள். முதலில் உன்னை இங்கல்லாம் யாரு வரச்சொன்னது என்று அவன் கத்தினான். அத்தைதான் கொடுத்தனுப்பிச்சாங்க என்றதும்தான் அடங்கினான். அவளின் ஒவ்வொரு செய்கையும் அவனுக்கு வியப்பை அளித்தாலும் அவனால் காதலியை மறக்க முடியாமல் தவித்தான். அந்த தவிப்பு இவளிடம் வெறுப்பாக உமிழ்ந்தது. மாதங்கள் உருண்டோடியது. அவனை மட்டும் அசைக்கவே முடியவில்லை. மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்த சமயத்தில்தான் குமார் அறிமுகமானான். அந்த அலுவலகத்திலேதான் வேலை பார்க்கிறான். முதலில் மெல்லிய புன்னகையில் ஆரம்பித்த நட்பு மெல்ல பற்றிக் கொண்டது. ஒரு நாள் அவர்கள் இருவரும் காணாமல் போனார்கள்.
முதலில் அவனால் இதை நம்பமுடியவில்லை. விரக்தியில் பாருக்கு சென்று தண்ணியடிக்க ஆரம்பித்தான். அவனுக்குள் கேள்விகள் பல மண்டையைக் குடைய ஆரம்பித்தது. எவ்வளவுதான் விலக்கிப் போனாலும் விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டவள் எப்படி ஓடிப் போனாள்? அப்படி என்ன உடல் சுகம் வேண்டிக்கிடக்கிறது? மண்ணரிக்கப் போகும் இந்த சரீரத்திற்கு இத்தனை வீரியமா? இந்த உலகில் காதலைவிட காமம்தான் பெரிதா? போதை ஏற ஏற அதையும் அனுபவித்து பார்த்துவிடுவது என்று நினைத்தான். ரூம்பாயை கூப்பிட்டு விசயத்தைச் சொன்னான்.
அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு அழகான பெண் வந்தாள். அவளை நெருங்க எழுந்தவன் போதையில் தள்ளாடி விழுந்தான். அவள் பதறிப் போய் அவனைப் பிடித்து மெல்ல கட்டிலில் அமர்த்தினாள். உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் வாந்தியெடுத்தான். சட்டென அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டு பாத்ரூமிற்கு அழைத்துப் போனாள். கொஞ்சம் நிலைமை சரியாகியதும், முகமெல்லாம் துடைத்துவிட்டு சோபாவில் அவனை அமரவைத்துவிட்டு தன் மடியில் படுக்க வைத்துக் கொண்டு அவன் நெஞ்சை நீவிவிட்டாள்.
காசுக்காக உடலை விற்கும் அவள் செய்யும் பணிவிடைகளைப் பார்த்தான். அவனுக்கு அவன் மனைவியின் ஞாபகம் வந்தது. காமம் தாண்டிய அன்பு புரிந்தது. அந்த அன்பில் கிறங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் இப்போது காதலியின் நினைவு சுத்தமாக அழிந்து போயிருந்தது.
Thursday, 9 July 2009
திருமணம்

இப்போதெல்லாம் எண்ணெய் பதார்த்தங்களை விலக்கிவிடுகிறேன். மசாலா ஐயிட்டங்களையும்தான். கோழிக்கறி சூடு என்றார்கள் அதனால் அதையும் தள்ளி வைத்தாகிவிட்டது. காய்கறிகளில் கேரட் தவறாமல் இடம்பெறுவது போல் பார்த்துக் கொள்கிறேன். கேரட் கண்களுக்கும் நல்லதாமே! இல்லையென்றால் கண்ணாடி போடுவது போலாகிவிட்டால் அழகே போய்விடும். அதோடு கிண்டல் வேறு செய்வார்கள்.
உடையலங்காரத்திலும் முன்பைவிட அதிகம் கவனம் செலுத்துகிறேன். அடிக்கடி முகம் கழுவுதலும் நடக்கிறது. முகப்பரு வராமல் பார்த்துக் கொள்வதும் பரு வந்தால் கிள்ளாமல் அதைப் போக்கவும் செய்கிறேன். கிள்ளினால் சீழ் பிடித்து வடுவாக மாறிவிடும் என்று டீ.வியில் டாக்டர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் அப்படியே படிந்துவிட்டது. முகம் அழகாயிருப்பது முக்கியமல்லவா. அழகுக்குத்தான் இந்த உலகத்தில் முக்கியத்துவம். குணம் இரண்டாம் பட்சம்தானே.
எனக்கு தலைமுடி சுருள் சுருளாக அழகாக இருக்கும். பார்ப்பவர்கள் அனைவரும் அப்படித்தான் சொல்வார்கள், 'இந்த தலைமுடிதான் உனக்கு அழகு' என்று. இப்போது ஆங்காங்கே ஒன்றிரண்டு வெள்ளை முடி தென்படுகிறது. இருக்காதா பின்னே வயது முப்பதை நெருங்கிவிட்டதே...
இப்போதெல்லாம் என் குடும்பத்தினருக்குகூட என்னைப் பிடிக்கவேயில்லை. அதுபற்றிகூட நான் கவலைப்படவில்லை. பாசமாக இருந்த என் தம்பி, 'இவளுக்கு எப்ப கல்யாணம் ஆகிறது நான் எப்ப கல்யாணம் செய்துக்கிறது. என்கூட படிச்ச பசங்களுக்கு எல்லாம் கல்யாணமாகி குழந்தைங்க கூட இருக்கு' என்று அலுத்துக் கொள்கிறான். அதைக் கேட்கும்போது எனக்கு வருத்தம் வரவில்லை. சிரிப்புதான் வருகிறது.
Tuesday, 7 July 2009
குட்டிச் சுவர்
எப்போதும் ஊருக்குப் போனாலும் சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து நலம் விசாரிக்கிறேனோ இல்லையோ சைக்கிளை எடுத்துக் கொண்டு ஊரை ஒரு ரவுண்ட் வந்தால்தான் ஒரு திருப்தி கிடைக்கிறது. கடைசியாக அந்தக் குட்டிச் சுவர்மீது கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருந்துவிட்டு வருவதுதான் என்னுடைய வ(ப)ழக்கமாக வைத்திருக்கிறேன். அந்தக் குட்டிச் சுவருக்கு ஒரு வரலாறே உண்டு.
என் நண்பர்கள் அனைவரும் வழக்கமாக சந்திக்கும் இடம் அந்த குட்டிச்சுவர்தான். பேருந்து நிலையம் அருகில் அமைந்திருந்ததால்தான் அந்தக் குட்டிச் சுவர் எங்களால் தத்தெடுக்கப்பட்டது. வருவோர் போவோரையெல்லாம் வேடிக்கை பார்த்துக் ('ஜொள்'விட்டுக்) கொண்டு அமர்ந்திருப்போம்.
அது மட்டுமல்ல... என் நண்பர்களின் சோக கதைகள் சந்தோஷங்கள் எல்லாம் பரிமாறிக் கொள்வதும் அங்கேதான். பேருந்து நிலையம் அருகே அப்படி ஒரு இடம் அமைவதே அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த இடத்தை வாங்க பிரபல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பாகப் பிரிவினை தகராறில் வழக்கு கோர்ட்டில் இருந்தது எங்களுக்கு சாதகமாக இருந்தது.
படிப்பு முடிந்து ஒவ்வொரு நண்பர்களும் ஒவ்வொரு ஊராக வேலைக்கு கிளம்பிவிட்டோம். இப்போதெல்லாம் போனில்தான் தொடர்பு. என்ன இருந்தாலும் முகம் பார்த்து பேசுவது போல் வருமா? இப்போது அந்தக் குட்டிச் சுவர் அனாதையாக நிற்கிறது. எப்போதும் ஊருக்கு வந்தாலும்... (முதல் பாராவை திரும்பவும் படித்துக் கொள்ளவும்.)
வருடங்கள் பல கழித்து இப்போது சொந்த ஊருக்கு சென்றபோதும் வழக்கமாக செல்லும் இடங்களுக்கு சென்றுவிட்டு அந்தக் குட்டிச் சுவர் இருக்கும் இடத்திற்கு சென்றபோது, அங்கே மிகப் பெரிய வணிக வளாகம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அந்த வளாகத்திற்குள்ளே ஆண், பெண் நண்பர்கள் பலர் அரட்டை அடித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தார்கள்.
Monday, 22 June 2009
நிம்மதி ( உரையாடல் போட்டிக்கான சிறுகதை)
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது
சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்று ஆசையில் சதாசிவம் தனது இரண்டு தங்கைகளின் மகள்களையே தன் மகன்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார். மூத்தவனுக்கு திருமணம் செய்த பெண் கிராமத்தில் வளர்ந்தவள். இளையவனுக்கு திருமணம் செய்த பெண் பட்டினத்தில் வளர்ந்தவள். மூத்தவன் சேகருக்கு திருமணம் முடிந்ததுமே தனிக்குடித்தனம் வைத்துவிட்டார் சதாசிவம். 'ஏன்?' என்று அம்மா கேட்டபோது, 'மூத்தவனுக்கு இன்னும் குடும்ப பொறுப்புன்னா என்னன்னு தெரியலை. தனிக்குடித்தனம் இருந்தால்தான் அவனுக்கு புரியும்.' என்றார்.
இரண்டு வருடம் கழித்து இளைய மகன் குமாருக்கு திருமணம் செய்து வைத்தார். குமார் படித்தது குறைவுதான் என்றாலும் குடும்பத்திலும், கஷ்ட நஷ்டங்களிலும் அப்பாவுக்கு துணையாக நின்றான். அதனால் சதாசிவத்துக்கும் அவன்மீது தனிப்பட்ட பற்று இருந்தது. அதனால் அவனை தனிக்குடித்தனம் வைக்கவில்லை.
ஆனால் திருமணம் முடிந்து இரண்டு மாதம்கூட ஆகவில்லை. பட்டினத்தில் படித்து வளர்ந்த பெண்ணான வளர்மதிக்கு இந்த கிராமத்தின் பரபரப்பே இல்லாத வாழ்க்கை பிடிக்கவில்லை. அதை மெல்ல குமாரிடம் எடுத்து சொன்னாள். எல்லாம் போகப் போக சரியாகிவிடும் என்று முதலில் சொல்லி வந்தான். ஆனால் வளர்மதி விடாப்பிடியாக இருந்ததால் குமாருக்கு கோபம் வரத்தொடங்கியது. இருந்தாலும் பொறுத்துக் கொண்டான். ஆசை அறுபது நாள் மோகம் முப்பதுநாள் என்பார்கள். அதுகூட இன்னும் முடிய வில்லையே!
திருமணத்தின் போதே குமாரிடம் அவரின் மாமா 'அண்ணன் தனிக்குடித்தனம் போய்விட்டான். நீயாவது அம்மா, அப்பாகூட கடைசி வரைக்கும் இருந்து அவங்களை நல்லபடியா வைச்சுக்கணும்.' என்றார். அதற்கு குமாரும் அப்படியெல்லாம் நான் விட்டுட மாட்டேன் மாமா. நீங்க கவலைப்படாதீங்க. அப்படி ஒரு நிலமை வந்தா, பெண்ணை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பிடுவேன தவிர, நான் தனிக்குடித்தனம் போக மாட்டேன்.' என்றான். அதை நினைத்துப் பார்த்த குமாருக்கு நாமும் அந்த தனிக்குடித்தனம் போகக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்று நினைத்தான். அந்த வருத்தத்தில் இருந்தவனின் நிலை புரியாமல் வளர்மதி மீண்டும் அவனிடம், "நாம கோயம்புத்தூருக்குக்கு போகலாங்க. இங்க உக்காந்து விவசாயிங்க கொண்டு வர்ற மோட்டரை நம்பி லேத் பட்டறை வச்சுக்கிட்டு ஈ ஓட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு, கோயம்புத்தூர் நல்ல இன்டஸ்ட்ரியல் ஏரியா. உங்களுக்கு நல்ல ஸ்கோப் இருக்கும். நிறையவும் சம்பாதிக்கலாம். அம்மா, அப்பாவை உங்க அண்ணன்கூட இருக்க சொல்லிடலாம் என்ன சொல்றீங்க?" என்றாள்.
இதுவரை பொறுமையாக இருந்தவன் சட்டென்று எழுந்து கன்னத்தில் பட்டென்று அறைந்துவிட்டான். உடனே அவள் கத்த ஆரம்பித்தாள். "கத்தாதே! சத்தம் அப்பாவுக்கு கேட்டிச்சு. அப்புறம் நான் சும்மாயிருக்க மாட்டேன்." என்றான். ஆனால் அவள் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு "ஓங்கி அறைஞ்சிட்டு அழாதேன்னு சொன்னா என்ன அர்த்தம் என்றவள் அழுவதை மட்டும் நிறுத்தவில்லை.
சத்தம் கேட்டு அம்மா ஓடிவந்தாள்."என்னா குமாரு? ஏன் வளர்மதி அழறா?"
"ஒன்னுமில்லம்மா! நீ போ!" என்றான்.
"அவ அழறா, நீ ஒன்னுமில்லைன்னு சொல்றே! என்னாச்சு வளர்மதி?" என்று கேட்க, அவள் சட்டென்று அறைக்குள் ஓடி கதவைத் சாத்திக் கொண்டாள்.
"என்ன குமாரு? உங்களுக்குள்ளே என்னாச்சு? அவளை அடிச்சியா?" என்றாள் அம்மா.
"ஒன்னுமில்லேன்னு சொல்றேன்ல... நீ போம்மா!" சற்று கோபமாகவே சொன்னான் குமார்.
குழப்பத்துடன் அம்மா அங்கிருந்து விலகிச் சென்று அப்பா இருக்கும் அறைக்கு செல்வதை பார்த்தான். அப்பாவைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். யார் யாரைப்பற்றி குறை சொன்னாலும் உடனே கூப்பிட்டு கேட்க மாட்டார். சொல்வதை மட்டும் கேட்டுக் கொள்வார். அதனால் தற்போது பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு அறைக்கதவைத் தட்டினான். கதவைத் திறக்காமல் வீம்பாக இருந்தாள். "வளர்... கதவைத்திறக்கிறியா... இல்லையா?" என்றான் சற்று காட்டமாக.
அந்த அதட்டலுக்குப் பிறகே கதவை மெல்ல திறந்துவிட்டுவிட்டு கட்டிலில் போய் அமர்ந்து முகத்தை முழங்காலில் புதைத்துக் கொண்டாள். அவளருகில் போய் உட்கார்ந்தான். அவளின் தலையில் கைவைத்து தலைமுடியை கோதியவாறு, "அப்பா, அம்மாவை விட்டு நான் எங்கயும் வரமுடியாது. அவங்களை அண்ணன்கூட இருங்கன்னு என்னால சொல்லமுடியாது. படிச்ச பொண்ணு நீ. நான் சொல்றதை புரிஞ்சிக்க. அம்மா வந்து திரும்பவும் ஏதாவது கேட்டா, எதுவும் சொல்லாதே. அவங்களுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க. நான் வேலைக்கு கிளம்புறேன். எதுவாயிருந்தாலும் அப்புறம் பேசிக்குவோம்" என்றவாறு கிளம்பிச் சென்றுவிட்டான்.
அதற்குப்பிறகு இரண்டு நாட்களாக அவள் அதைப் பற்றி எதுவும் பேசாமல் மௌனமாகவே இருந்தாள். அவள் பேசாமல் இருப்பது குமாருக்கும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அவனின் முகவாட்டத்தை சதாசிவமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார் .
மூன்றாம் நாள் திடீரென்று பட்டறைக்கு போன் வந்தது. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று. அலறி அடித்துக் கொண்டு ஓடினான். அம்மாவுக்கு 'லோ-பிரசர்' இருக்கிறது என்று டாக்டர் சொல்லி, மருந்து மாத்திரைகள் எழுதி கொடுத்து அனுப்பினார். வீட்டில் கொண்டு வந்துவிட்டுவிட்டு தன் அறைக்குச் சென்று சோர்வாக அமர்ந்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் அங்கு அப்பா வந்தார்.
"பட்டறைக்கு போகலையா குமார்?"
"இல்லப்பா... வேலை எதுவும் தற்சமயம் இல்லை. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லாம இருக்குது... அதான்..."
"அவளைப் பற்றி நீ கவலைப்படாதே! அவ உடம்புக்கு நோய் வர்றதுக்கே காரணமே நீங்கதான். உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு. வீடுன்னா கலகலப்பா இருக்கணும். அதைவிட்டுட்டு எப்பப் பார்த்தாலும் அழுது வடிஞ்சிகிட்டு இருந்தா எப்படி இருக்கும்? நீ முதல்ல உன் பொண்டாட்டியை சந்தோஷமா வைச்சிக்கிறதுக்கு பாரு.'' என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று போய்விட்டார்.
அப்பா இப்படி பேசியது மிகவும் வருத்தமாக இருந்தது. கோபத்துடன் வளர்மதியை கூப்பிட்டான். சமயலறையி-ருந்து வந்து மவுனமாக நின்றாள்.
"நீ எதுவும் அவங்ககிட்ட சொன்னியா?"
"இல்லையே! நான் பாட்டுக்கு பேசாம என் வேலையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன்."
""அதான் ஏன்னு கேட்கிறேன். நீ இப்படி மூஞ்சை தூக்கிவைச்சிக்கிட்டு இருந்ததாலதான் அம்மாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அப்பா சொன்னது உன் காதில விழுந்திச்சா?''
"இங்க பாருங்க, என்னை சும்மா வம்புக்கிழுக்காதீங்க. நான் நம்ம நல்லதுக்காக சொன்னதை நீங்க கேட்கலேன்னு வருத்தத்தில இருக்கேன், அவ்வளவுதான். அவங்களுக்கு உடம்பு சரியில்லாம போனதுக்கு நான் காரணம்னு சொல்றதெல்லாம் அபாண்டம். ஆமா மருத்துவ செலவுக்கு என்ன பண்ணீங்க?''
"நகையைத்தான் அடகு வைச்சேன்."
"இப்படியே செஞ்சிக்கிட்டு இருங்க. முன்னேற வழியைச் சொன்னா, பழியைத் தூக்கி என் மேலயே போடுறீங்க அப்பாவும் புள்ளையுமா. நல்லதுக்கே காலமில்லப்பா." என்றவாறு சமயலறைக்கு சென்றுவிட்டாள்.
"உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சதிலேர்ந்து எங்களுக்கு நிம்மதியே போச்சு" என்று அப்பா சொன்னது வலித்தது. கிடைக்கிற சொற்ப வருமானம் வேறு. அம்மாவுக்கும் மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும் என்று டாக்டர் சொன்னதும், அந்த மருந்துகள் வாங்க ஆகும் செலவும் மிரட்சியை உண்டு பண்ணியது.
வளர்மதி சொல்வதும் சரிதானோ... கோயம்புத்தூர் நல்ல ஊர்தான். பேசாமல் அங்கே சென்றுவிடலாம். அப்பா, அம்மாவையும் அழைத்துச் சென்றுவிடலாம். அப்படி சென்றுவிட்டால் வளர்மதியையும் சந்தோஷப்படுத்தியது மாதிரியாச்சு, அப்பா, அம்மாவையும் தனித்து விட வேண்டியதில்லை. இதுதான் சரி' என்று எண்ணிக் கொண்டு அப்பாவைப் பார்க்க கிளம்பினான்.
"அப்பா... ஒரு யோசனை..." 'என்ன?' என்பது போல் பார்த்தார். குமார் தொடர்ந்தான்.
"இங்க பிசினஸ் சரியாயில்லை. கோயம்புத்தூர்ல லேத் பட்டறைக்கு நல்ல வேலை இருக்கும்னு கேள்விப்பட்டேன். அதான் அங்க போயிடலாம்னு தோணுது. நாம எல்லாரும் அங்க போயிடலாம்பா..."
"உனக்கு சரின்னு பட்டா செய். நீங்க சந்தோசமா இருந்த அது போதும். ஆனா, எங்களை கூப்பிடாதே. எங்க கட்டை இங்கதான் வேகணும். நீங்க போறதால எங்களுக்கு வருத்தம் எதுவும் கிடையாது."
அப்பா சொல்லிவிட்டால் அவ்வளவுதான். அதற்குப்பிறகு அதில் மாற்றம் செய்ய மாட்டார். ஒன்றும் சொல்லத் தோணாமல் அறைக்குத் திரும்பினான். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த வளர்மதி, "அப்புறம் என்ன? மாமாவே சொல்-ட்டாங்க. இனிமே நீங்கதான் முடிவு எடுக்கணும்." என்றாள்.
"அவங்களை தனியே விட்டுட்டு எப்படி போறது வளர்..."
"ஏங்க வருத்தப்படுறீங்க. பக்கத்திலதான் உங்க அண்ணன் இருக்கார். பார்த்துக்க மாட்டாரா? நீங்க போய் பேசுங்க. உங்க நிலமையை சொல்லுங்க..."
அதன்படியே அண்ணனிடம் பேசிவிட்டு, அப்பா, அம்மாவிடம் அனுமதி வாங்கிக் கொண்டு கோயம்புத்தூர் கிளம்பினார்கள்.
"ஏங்க நம்மளையும்தான் கூப்பிட்டானே, ஏன் வேணாம்னு சொல்லிட்டீங்க?" என்ற மனைவியைப் பார்த்து சிரித்தார்.
"சின்னஞ்சிறுசுக சந்தோசமா இருக்கணும். நிறைய சம்பாரிக்கணும் நினைக்கிறாங்க. நாம வாழ்ந்து முடிச்சிட்டோம். அவங்க இனிமேதான் வாழ்க்கையைத் தொடங்கணும். நாம வாழ்ந்த காலகட்டம் வேற, இப்ப உள்ள கால கட்டத்தில போட்டிகள் நிறைஞ்சிருக்கு. அதில ஜெயிச்சு வர்றணும்னா நாம வழிகாட்டியா இருந்தா போதும். இடைஞ்சலா இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேன். அதான் பாசத்தை மனசுக்குள்ளேயே வைச்சிக்கிட்டு கொஞ்சம் கடுமையாவும் பேசிட்டேன். எல்லாம் அவன் நல்லதுக்குத்தான்." என்றார்.
தன் கணவன் எடுத்த முடிவு எப்பவும் சரியாகத்தான் இருக்கும் என்று உணர்ந்திருந்தவள் புன்னகைத்தாலும் விழியோரம் கண்ணீர் துளிகள் வழிவதை மட்டும் அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
Sunday, 3 May 2009
தனிமரம் சிறுகதை பாகம்- 2 (முற்றும்)
" என்னடா? ஏ்ன ஒரு மாதிரி இருககே?" என்றாள் அம்மா.
"எனக்கு முதலாளிப் பெண்ணை கல்யாணம் பண்ண விருப்பமில்லைம்மா..."
இதைக்கேட்ட தங்கை கோபமாக "ஏன் துரைக்கு பிடிக்கலையாம்?"
"பிடிக்கலைன்னு சொன்னா ஏன் எதுக்குன்னு கேட்டு தொந்தரவு பண்ணாதீங்க" என்று குரலை உயர்த்தினான்.
"அந்த முதலாளிக்கு ஒரே பொண்ணு, கம்பெனி, வீடு, சொத்துன்னு ஏகப்பட்டது இருக்கு. நல்ல படிப்பு. அப்புறம் என்ன குறை? வலிய வர்ற சீதேவிய விரட்டி வி்ட்டுடு. நான் மூலையில மூதேவியா உட்கார்ந்திருக்கேன். என் கல்யாணத்தையும் எந்த செலவில்லாம செஞ்சி வைக்கிறேன்னு சொல்றாரு, இந்த மாதிரி நேரம் அமையறதே அபூர்வம். எல்லாம் என் தலையெழுத்து." என அழ ஆரம்பித்த தங்கையை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான்.
"சேகர் உனக்கு என்ன பிரச்சினை?" என்றாள் தாய்.
" சின்ன வயசிலேர்ந்து நான் ஆசைப்பட்டது என்னம்மா எனக்கு கிடைச்சிருக்கு? நல்லா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பா இறந்துபோக குடும்ப சூழ்நிலையில வேலைக்கு போகும்படி ஆயிடுச்சு. எனக்கு பிடிச்ச பெண்ணாப்பார்த்து நான் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தானே என் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்."
"இவ்வளவு பணம் உள்ள சம்மந்தத்தைவிட்டு்ட்டு. வேற எந்த இடத்தில் சம்மந்தம் வைச்சிக்கி்ட்டாலும் நீ சொல்ற நிம்மதி கிடைக்காதும. இந்த காலத்தில பணம் இல்லைன்னா ஏது நிம்மதி. பேசாம இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க. என்ன மட்டும் உங்க ஓனர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னா உடனே ஓக்கேன்னு சொல்லிருப்பேன்." என்று கூறிய தங்கையை மிரட்சியுடன் பார்ததான் சேகர்.
வெறுப்புடன் தன்அறைக்கு சென்றான். தூக்கம் படிக்காமல் யோசனையாய் உங்கார்ந்திருந்தான். விளக்கு வெளிச்சம்பட்டு எழுந்து வந்தாள் அம்மா.
" சேகர் உன் தங்கையோட பேச்சை கேட்டியா... அவளுக்கும் வயசு ஏறிகிட்டே போகுது. நம்மாள அவளுக்கு கல்யாணம் செஞ்சி வைக்க பணம் பற்றாக்குறை காரணமா தள்ளிப்போய்கிட்டே இருக்கு. நீ நல்லா யோசனை பண்ணு. நம்ம குடும்ம மானத்தைக் காப்பாத்துப்பா. அவ ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு பண்ணிக்கிட்டா நான் உசிரோட இருக்க மாட்டேன். முதலாளிப் பெண்ணை நீ பார்த்ததில்லை. வெளிநாட்டுலேர்ந்து வந்தோன்ன பாரு. போட்டோலேயே அந்தப் பொண்ணு நல்லாத்தான் இருக்கா. வெளிநாட்ல படிச்சப் பொண்ணு. கொஞ்சம் மாடர்னா டிரஸ் பண்ணுவா போலிருக்கு. எல்லாம் இங்க வந்தா சரியா போயிடும். சில விசயங்களை நாமதான் அனுசரிச்சி்ப் போகணும்" அம்மா பேசிக்கொண்டே போனாள். சேகருக்கு எதுவும் கேட்கவில்லை. மனம் முழுவதும் மாலதி... மாலதி... மாலதி...
எல்லோரும் வியக்கும் வண்ணம் திருமணம் நடந்தேறியது. கம்பெனி மேனேஜிங் டைரக்டராக சேகர் நியமிக்கப்பட்டான். தங்கைக்கு திருமணம் முடிந்து கோயம்புத்தூர் போய்வி்ட்டாள்.
கல்யாணம் முடிந்த கையோடு சித்ரா (முதலாளிப் பெண்)சேகரிடம் 'நான் இன்னும் நிறைய படிக்கணும். அப்பாவோட வற்புறுத்தலாலதான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். நீங்கதான் அப்பாக்கிட்டே பர்மிசன் வாங்கித்தரணும். என் பேச்சை விட உங்க பேச்சைத்தான் அப்பா கேட்டகிறாரு. அவ்வளவு தூரம் என்ன பண்ணுனீங்களோ...ஆனா நான் அமெரிக்கா போகணும். அதுக்கு அனுமதி வாங்குங்க. படிச்சிமுடிச்சி வர்றவரைக்கும் நமக்குள்ளே தாம்பத்தியம உறவு எதுவும் கிடையாது." என்றாள்.
சேகருக்கும் மனதிற்கு ஆறுதல் தேவைப்பட்டது. அதனால் முதலாளியிடம் போராடி சம்மதம் பெற்று சித்ராவை அமெரிக்கா அனுப்பிவைத்தான். தங்கைக்கு சந்தோசத்தைக் கொடுத்த இந்த பணம், தனக்கு நிம்மதியை தராததை எண்ணி கண் கலங்க அமர்ந்திருந்தான் சேகர்.
பணத்திற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டாம். பணம் குறைந்த வட்டிக்கு வெளியே கிடைக்கும்.
- ஸ்காட்லாந்து பழமொழி.
Wednesday, 29 April 2009
தனிமரம் சிறுகதை - பாகம் -1
மதிய உணவு இடைவேளையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த மாலதி தன் அருகில் நிழல்விழ, நிமிர்ந்து பார்த்தாள், சேகர் நின்றிருந்தான்.
"வாங்க சார். நான் நேற்று உங்க வீட்டுக்கு வந்திருக்க கூடாது...சாரி...''
"மாலதி... சாரி கேட்கவேண்டியது நீங்க இல்லை... நான்தான்... பர்மிசனில் வீட்டுக்கு போன நான் ஆபிஸ் டிராயர் சாவியை மறந்து எடுத்துட்டுப் போனது எவ்வளவு பெரிய தப்பு. அதற்காக நீங்க வரப்போக, என் தங்கச்சி அதை தப்பா எடுத்துக்கிட்டு சே... நடந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதற்காகத்தான் நான் வந்தேன்.'' என்றான்.
சேகரின் தங்கை அநாகரிமாக நடந்து கொண்டது வருத்தம் அளித்தாலும், அதை மறைத்துக் கொண்டு, " சே... சே... அதை நேற்றே நான் மறந்துட்டேன். என் மேலதான தப்பு. ஆபிஸ் வேலைக்கு பியூன் இருக்கும்போது, உங்ககிட்ட ஆபிஸ் டிராயார் சாவி வாங்க உங்க வீட்டுக்கு நான் வந்திருக்க கூடாது. என் வீடும் அதே தெருவில இருந்ததால வந்தேன்.'' என்றாள்
"மாலதி. நீங்க பெருந்தன்மையா சொன்னாலும், என் தங்கச்சி நடந்தவிதம் எனக்கே புடிக்கலைங்க. என்னன்னு தெரியலை கொஞ்ச நாளாவே இப்படித்தான் நடந்துக்கிறா.''
"எல்லாம் வயசுதாங்க காரணம்.''
"என்னங்க சொல்றீங்க? உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதானே இருக்கும். உங்ககிட்ட உள்ள இந்த பக்குவமான பேச்சு அவகிட்ட இல்லையே...''
"பக்குவங்கிறது அனுபவம் சம்பந்தப்பட்டதுங்க. எனக்கும் உங்க மாதிரி ஒரு அண்ணன் இருந்தா... நானும் அப்படித்தான் நடந்துக்குவேனோ என்னவோ... இப்ப என் குடும்ப பொறுப்பு என்மேல இருக்கிறதால கல்யான ஆசைகளை தூர நிறுத்திவைச்சிருக்கேன். ஆனா உங்க தங்கச்சிக்கு அப்படி கிடையதில்லையா... அவளுக்கு அவ கனவுகள்தான் முக்கியமா இருக்கும்.''
"ம்... இதுக்குதான் பொம்பள மனசு பொம்பளைக்குத்தான் தெரியும்னு சொன்னாங்க போலிருக்கு... சரிங்க, மணியாகுது. நான் என் சீட்டுக்கு போறேன். மறுபடியும் உங்ககிட்ட ஸாரி கேட்டுக்கிறேன்.'' என்றவாறு சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மனதுக்குள் சேகர் சொன்னது மீண்டும் ஒலித்தது... "உங்களுக்கும் என் தங்கச்சி வயசுதான்... உங்ககிட்ட இருக்கிற பக்குவம் அவகிட்ட இல்லியே...' மாலதி தன்னையும் அறியாமல் மெலிதாய் புன்னகைத்துக் கொண்டாள்.
மாலைநேர கடையில் காப்பி குடித்துவிட்டு தம் அடித்துக் கொண்டிருந்த சேகரைக் கண்டதும், காப்பி வாங்க வந்த ப்யூன், "சேகர் சார்...'' என்றவாறு அருகில் வந்தான்.
"என்ன அய்யாதுரை, என்ன விஷயம்?'' என்றான் சேகர்.
"நம்ம அய்யா, ஏதாவது உங்ககிட்ட விசாரிச்சாரா?'' என்றான். அய்யா என்பது கம்பெனி முதலாளியை.
"ஏன்? என்ன விஷயம்?''
"இல்ல... மதியானம் நீங்களும் மாலதி அம்மாவிம் பேசிக்கிட்டிருக்கும்போது, அய்யா வந்திருப்பாரு போல... காதல் அது இதுன்னு ஏதாவது விசயமா அப்படின்னு கேட்டாரு... அதான் உங்களை நேரா விசாரிச்சாரான்னு கேட்டேன்...'' என்று சிரித்தான்.
"நம்ம அய்யாவா அப்படிக் கேட்டாரு...'' என்றவன் நடந்ததை ப்யூனிடம் விளக்கினான்.
"அப்படியா விஷயம்... சரி நான் வர்றேன் சார்'' என்றவாறு ப்யூன் செல்ல, முதலாளி நம்மைப்பற்றி எதுக்கு விசாரிக்கணும்? என்று யோசிக்க ஆரம்பித்தான். மாலதியை தன்னுடன் இணைத்து பார்த்த முதலாளிக்கு மானசீகமாக நன்றி சொன்னான். மனத்திரையில் மாலதியின் முகம் பளீரென்று மின்னியது.
சலவைக்கற்கள் ரெத்னா இல்லம் என்று பதிக்கப்பட்ட வாசகத்துடன் கம்பீரமாக காட்சியளித்த பங்களாவின் கேட்டை நெருங்கினான் சேகர். வாட்ச்மேன் சேகரைக் கண்டதும் சிரித்து, "அய்யா பின்னாடி தோட்டத்துல உட்கார்ந்திருக்கிறார். உங்கள அங்க வரச்சொன்னார்'' என்றான்.
சேகரின் மனதிற்குள் என்ன இவர் இரண்டு நாட்களாக வித்தியாசமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்துக் கொண்டான். நேற்று பியூனிடம் விசாரித்தவர், ஞாயிற்றுக்கிழமையான இன்று வீட்டிற்கு வரச்சொல்லியிருக்கிறார்... இப்போது நேரிடையாக விசாரிக்கப் போகிறாரா? இதுவரையில் கம்பெனி ஆட்களை யாரையுமே வீட்டிற்கு வரச்சொன்னது இல்லை என்று ப்யூன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவர், இவனைப் பார்த்ததும், "வாங்க சேகர், உங்களுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன். உக்காருங்க.'' என்றார். ஆபிஸ் நேரங்களில் காட்டும் கண்டிப்பான குரல் இங்கு இல்லை. சேகர் அமர்ந்ததும், " என்ன சாப்பிடுறீங்க?'' என்றார்.
"ஒண்ணும் வேணாம் சார்... என்ன விசயமா வரச்சொன்னீங்கன்னு எனக்கு புரியவேயில்லை. ஒரே குழப்பமா இருக்கேன் சார்'' என்றான்.
"கல்யான வயசுப் பொண்ண வீட்ல வைச்சுருக்கிறது ரொம்ப கஷ்டமான விசயம் இல்லையா சேகர்?'' என்றார்.
பியூன் எல்லா விசயத்தையும் இவரிடம் வந்து சொல்லிட்டானா என்று யோசித்துக் கொண்டே, "ஆமா சார்... கால நேரத்தோட கல்யாணம் பண்ணிட்டா பிரச்சினை இல்லை'' என்றான்.
"உங்க தக்ச்சி கல்யாணத்தை ஏன் தள்ளிப் போடுறீங்க? சீக்கிரமா பார்த்து முடிக்க வேண்டியதுதானே?''
"இன்னும் அதுக்கு என்ன நான் தயார் பண்ணிக்கலை சார்..'' என்று இழுத்தான்.
"ஏன் ஏதாவது பணப்பிரச்சினையா?''
"சார்... அது வந்து...''
"சும்மா சொல்லுங்க சேகர்...''
" ஆமா சார்... எங்க அப்பா பார்த்த வேலையைத்தான் எனக்குக் கொடுத்திருக்கீங்க. எங்க அப்பா இறந்தப்போதான் நிறைய கடன் வாங்கி வைச்சிட்டு போயிருக்கிற விசயமே எங்களுக்கு தெரியும். அதையெல்லாம் இப்பதான் அடைச்சிட்டு வர்றேன். இனிமேதான் ஏற்பாடு பண்ணணும்.''
"உன் தங்கச்சி வயசுப் பொண்ணுகளுக்கெல்லாம் கல்யாணம் ஆகிட்டதா கேள்விப்பட்டேன். அந்த விரக்கிதியிலதான் உன்ள தங்கச்சி, நம்ம ஸ்டாப் மாலதியை தப்பிதமா பேசினதா கேள்விப்பட்டேன். இந்த மாதிரி நேரத்தில நீங்க இன்னும் நாள் கடத்துறது சரியில்லைன்னு எம்மனசுக்குப்படுது'' என்றார்.
"என்னைப்பத்தி, என் குடும்பத்தைப் பத்தி நிறைய தெரிஞ்சி வைச்சிருக்கீங்க சார்''
"இதுக்குப் பின்னால என் சுயநலமும் இருக்கு சேகர்...''
"என்ன சொல்றீங்க சார்?''
"என் பொண்ணைப் பார்த்திருக்கீங்களா நீங்க?''
"இல்லை சார்... வெளிநாட்டில படிக்கிறதா கேள்விப்பட்டேன்....''
"ஆமா. படிட்பபு முடிஞ்சு, இப்ப ஊருக்கு வர்றா... வந்த உடனே அவளுக்கு கல்யாணம் பண்ணிடணும்னு முடிவெடுத்திருக்கேன். மாப்பிள்ளையை கூட தேர்வு பண்ணியாச்சு... அது... நீங்கதான்...''
"சார்.... நீங்க... '' அவர் குடுத்த அதிர்ச்சியிலும் மாலதி முகம் கண்முன் தெரிந்தது.
"யெஸ் சேகர். உங்க தங்கச்சி கல்யாணமும், உங்க கல்யாணமும் ஒரே நேரத்தில் வைச்சிக்கலாம். முழுச்செலவையும் நானே பார்த்துக்கிறேன். உங்களோட மூணு வருஷ சர்வீஸ்ல, உங்களுக்கே தெரியாம என் பார்வை உங்க மேலதான் இருந்திச்சு. என் மகளோட படிப்பு முடியட்டும்னு காத்திருந்தேன். இப்ப யோசிச்சு, நல்ல முடிவைச் சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன். இப்ப போயிட்டு வாங்க'' என்றார்.
பதில் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல், வீடு நோக்கி கிளம்பினான்.
(தொடரும்)
Tuesday, 7 April 2009
விடைதாருங்கள் இந்த சிறு(விடு)கதைக்கு.
இந்த கதை, பல வருடங்களுக்கு முன் நடந்தது. (இந்த வரி, நீங்கள் சொல்லப்போகும் முடிவிற்கும் சம்பந்தப்பட்ட ஒரு க்ளுவாகவும் இருக்கும்) அந்தக்காலத்திலும் வேலைதேடி அண்டை நாடுகளுக்கு பயணம் செல்வது வாடிக்கையான விடயம்தான். அந்த மாதிரி ஒரு நான்கு நண்பர்கள் பயணம் தொடர்ந்தார்கள்.முதல் நபருக்கு சிற்பம் செய்யும் வேலையும், 2-ம் நபருக்கு தையல் வேலையும், 3-ம் நபருக்கு ஆபரணத்தொழிலும், 4-ம் நபருக்கு மந்திர தந்திர வேலைகளும் தெரியும்.
நால்வரும் பயணக் களைப்பில் ஒரு இடத்தில் கூடாரமடித்து தங்கினார்கள். வழி செலவுக்காக அவர்கள் கையில் விலை மதிப்பற்ற பொருட்கள் பலவும் வைத்திருந்ததால், அப்பொருட்டகள் களவுப் போகாமல் இருக்க, இந்த இரவுப் பொழுதில் ஒவ்வொருவரும் மாற்றி காவல் இருப்பது என்று அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். அதன்படி முதலில் சிற்பத் தொழில் தெரிந்தவன் காவல் இருந்தான். அவனுக்கு தூக்கம் வராமல் இருக்க தன் கைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பெண் சிற்பத்தை செய்ய ஆரம்பித்தான். அவனின் காவல் நேரம் முடிவதற்குள் சிலையை செய்து முடித்தான்.
பின்பு, தையல் தொழில் செய்பவன் காவலுக்கு வந்தான். அவன் சிற்பி செய்த சிலையைப் பார்த்தான். அந்த சிலைக்கு ஆடைகள் தைத்து, அவன் காவல் நேரத்தை பூர்த்தி செய்தான்.
பின்பு காவல் பொறுப்பை ஆபரணத் தொழில் செய்யபவனிடம் ஒப்படைத்தான். அவன் சிலையையும், அதற்குத் தைக்கப்பட்ட ஆடைகளையும் கண்டு, இதற்கு ஆபரணம் செய்து போட்டால் அழகாக இருக்கும் என்று தோன்ற, அப்படியே செய்து முடித்தான். அடுத்து, காவல் பொருப்பு மந்திர, தந்திர தொழில் தெரிந்தவனிடம் சென்றது.
அவன் தனக்கு தெரிந்த மந்திரத்தை எல்லாம் பயன்படுத்தி அந்த சிலைக்கு உயிர் கொடுத்தான். பொழுது விடிந்தது.
அனைவரும் கண்விழித்தனர். அழகுமிக்க பெண்ணெருத்தி அங்கிருப்பதைக் கண்டு அதிசயத்தனர்.
இப்பொழுது அவர்களுக்குள் ஒரு சண்டையே மூண்டது. சண்டைக்கு காரணம் அந்த உயிர்பெற்ற பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வது என்பதுதான். சண்டை முற்றி ஒரு தீர்வு பெறமுடியாமல் தடுமாறினார்கள். அதற்காக அந்த நாட்டு அரசனை அணுகுவது என்று முடிவு செய்தனர்.
அரசனும் நடந்தவற்றை எல்லாம் கேட்டு, ஒரு தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப்பட்டனர்.
அந்த தீர்ப்பு என்னவாக இருக்கும்.
நீங்கள் சொல்லுங்கள்!
Wednesday, 18 March 2009
தனிக்குடித்தனம்
எதந்கெடுத்தாலும் மாமியார், மாமனாரைக்கேட்டு செய்வது பிடிக்கவில்லை. தினயாக பேசமுடியவில்லை. ஒரு சினமாவுக்கு போக முடியவில்லை. இப்படி ஏகப்பட்ட 'இல்லை' கூட்டுக்குடித்தனத்தில். கணவனிடம் வற்புறுத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து தனியே குடிவந்த சந்தோசம் கொஞ்ச நாட்கள்டகூட நிலைக்கவில்லை. ஒன்றாக இருந்தபோது ஒழுங்காக இருந்த சேகர், வீ்ட்டுக்கு தாமதாமக வருவதைக்கூட பொறுத்துக்கொண்ட அகிலாவால் கணவன் குடிக்கவும் ஆரம்பிக்க வெறுத்துப்போனாள். முதலில் குடிக்கவில்லை பாக்குதான் போட்டிருக்கிறேன் என்றவன் பிறகு ஒத்துக்கொண்டான். 'அப்படித்தான் செய்வேன்' என்று கூற அதிர்ந்துபோனாள். நாளாக நாளாக இரவு வீட்டிற்கு வரும் நேரம் மாறிக்கொண்டிருந்தது. அரிசியில்லை, பருப்பு இல்லை என்று சொல்லவே பயந்தாள். 'நான் எங்கே போறது? சும்மா தொந்தரவு பண்ணினே,நான் எங்கேயாவது போயிடுவேன்' என்று மிரட்டலாய் கூறினான்.
சந்தர்ப்பம் இப்படி இருக்க, ஒரு வயசு குழந்தைக்கும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று வர ரொம்பவும் வெறுத்துபோனாள். அம்மா வீட்டுக்குபோகலாம் என்றாள், அம்மாக்காரி கடுமையாக திட்டினாள். 'எங்க பேச்சை மீறி, தனிக்குடித்தனம் போனில்ல... அனுபவி! உனக்கு கீழே ஒருத்தி இருக்கா... இங்க வந்தீன்னா அவ வாழ்க்கை பாழாய் போகும். அதனால இங்க வர்ற வேலைமட்டும் வச்சுக்காதே!' என்றாள்.
அகிலாவுக்கு இப்போதுதான் உறைத்தது. தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என்று.பொழுதும் விடிந்தது. இதுவரை அவனும் வரவில்லை.ஒரு கடிதம் எழுதி கணவன் பார்க்கும் இடத்தில் வைத்துவி்ட்டு, ஒருமுடிவோடு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினாள்.
தாமதமாக வீடுவந்த சேகர், வழக்கத்திற்கு மாறாக வீடு பூட்டப்பட்டிருந்ததைக் கண்டான். வழக்கமாக சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவி எடுத்து திறந்து உள்ளே சென்றவன், கண்ணாடிக்கருகில் காற்றில் படபடத்துக்கொண்டிருக்கும் கடிதத்தை எடுத்துப் படித்தான். மெல்ல புன்னகைத்துக்கொண்டான். கூட்டுக்குடித்தனத்தின் அருமையை உணர்ந்து கொண்ட அகிலாவுக்காக குடிகாரனாக போட்ட வேசத்திற்கு நல்ல பலன் கிடைத்ததில் மகிழ்ந்து போனவன் வீட்டை காலி செய்ய டெம்போவுக்கு சொல்ல கிளம்பினான். மறக்காமல் மாமியாருக்கும் நன்றி சொல்லி போன் செய்தான்.
Sunday, 8 March 2009
கொக்கு எப்படி இருக்கும்? (நகைச்சுவைக்கு மட்டும்)
அதற்கு அந்தப் பெண்மணி, "சாப்பிட அடம் பிடிக்கிறாள்" என்றாள்.
"அடம்பிக்கிற அளவுக்கு என்ன சாப்பிட கொடுக்கிறீங்க?" என்றார் அவர்.
"பால் சாதம்தான்" என்றாள் தாய்.
"பால் சாதம் என்றால் என்படி இருக்கும்?" என்றார் கண்பார்வையற்றவர்.
"பால் வெள்ளையா இருக்கும். அதை சாப்பாட்டில் கலந்து குழந்தைக்கு கொடுக்கிறேன்" என்றாள்.
"ஏம்மா, என்னிடம் வெள்ளையா இருக்கும் என்றால் எப்படி தெரியும்? ஏதாவது உதாரணம் சொல்லி சொல்லேன்?" என்றார்.
"வெள்ளை என்றால் 'கொக்கு' போல இருக்கும்" என்றாள் அவள்.
"கொக்கு எப்படி இருக்கும் என்று கண்தெரியாத என்னிடம் சொல்கிறாயம்மா. எனக்கு கொக்கு எப்படி இருக்கும் என்றே தெரியாதே!" என்றார்.
"கொக்கு இப்படித்தான் இருக்கும்" என்று தன் கையை கொக்குபோல் செய்து, கண்பார்வையற்றவரின் கையைப்பிடித்து தொட்டு காண்பித்தாள் அந்த தாய்.
அதற்கு அந்த கண்பார்வையற்றவர், "அதுசரி,இவ்வளவு பெரிய கொக்கு போல இருப்பதை குழந்தை வாயில் திணித்தாள், அந்தக் குழந்தை என்ன செய்யும் பாவம்" என்று சொன்னார்.
அந்த தாய் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.
நகைச்சுவையாக மட்டும் எடுத்துக் கொள்ளவும். இது எனது 25 பதிவு.
Sunday, 1 February 2009
பியுன் கோபால் (சிறுகதை)
அவரே பல சமயங்களில் இவனிடம் வந்து, "ஏதாவது வேணும்னா சொல்லு சார்...' என்பார்.ஆனாலும் எதுவும் வாங்கிவரச் சொல்ல மாட்டான். அதனாலேயே இவன்மீது அவருக்கும் ஒரு மரியாதை இருந்தது.
அப்படிப்பட்ட கோபால்மீது கடந்த சில நாட்களாகவே அலுவலக ஊழியர்கள் அனைவரும் குற்றப் பத்திரிகை வாசித்தார்கள். விஷயம் இதுதான்... யார் என்ன வேலை சொன்னாலும் செய்து வந்தவர் இப்போதெல்லாம் யார் என்ன வேலை சொன்னாலும் அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலை மட்டும் சொல்லுங்க. செய்யறேன். வேற எந்த வேலையும் செய்யமுடியாது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்ல ஆரமிபித்துவிட்டார் என்பதுதான் அது.
சுந்தருக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏன் என்ன ஆச்சு இவருக்கு? நல்லாத்தானே இருந்தாரு? பணி ஒய்வுப் பெற இன்னும் சில மாதங்களே இருக்கையில் இப்படி கெட்டப் பேரை சம்பாதித்துக் கொள்ளலாமா? அவருக்கு நல்லவிதமாக விழா செய்து அனுப்பனும் என்று பேசிவந்தவர்கள்கூட, இவரின் அதிரடி நடவடிக்கையால் அப்படியே மாற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சுந்தரால் இதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை. காரணம் என்னவென்று கேட்டுவிடுவது என்று தீர்மானித்தான். அவரை அழைத்து "உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். கேண்டின் பக்கம் வாங்க.'' என்று அழைத்தான்.அவரும் "சரி என்று தலையாட்டிவிட்டு நடந்தார்.அலுவலகத்திற்கருகில் உள்ள கேண்டினில் சொற்பமாய் கூட்டம் இருந்தது. அருகில் இருந்த வேப்பமரத்தடியில் போய்நின்றார்கள் இருவரும்.
"என்ன சார் பேசணும்?'' என்றார் கோபால்.
"நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்க கூடாது. என்ன ஆச்சு உங்களுக்கு... அலுவலகத்தில எல்லாருகிட்டயும் நல்லப் பேரை எடுத்திருந்தீங்க... இப்ப இப்படி... ஏன் மாறிட்டீங்க.... எனக்கே மனசு கஷ்டமா இருக்கு....'' என்றான் சுந்தர்.
"எனக்கும் கஷ்டமாதான் தம்பி இருக்கு. ஆனா வேற வழி தெரியல....'' என்றார்.
"நீங்க சொல்றது எனக்கு புரியல... ஒய்வுப் பெறப்போகும் சமயத்தில இப்படி ஒரு கெட்டப் பெயரோட போகலாமா...'' என்றான் சுந்தர்.
"ஓய்வுப் பெறப்போறதாலதான் தம்பி இப்படி நடந்துக்கிறேன்.'' என்று சொன்னவர், கண் கலங்கினார்."" என்ன சொல்றீங்க... ஏன் கண்கலங்கிறீங்க...?''
"தம்பி, உன்கிட்ட சொல்றதுக்கென்ன... நான் இந்த அலுவலகத்தில முப்பது வருமா வேலை செய்யுறேன். யார் என்ன வேலை சொன்னாலும் வயசு வித்தியாசம் பார்க்காம செய்வேன். இதோ எனக்கு வயசாயிடுச்சுன்னு அனுப்பப் போறாங்க... எனக்குப் பின்னாடி யார் வேலைக்கு வருவாங்கன்னு தெரியாது. அவரும் என்ன மாதிரியே யார் என்ன சொன்னாலும் செய்வாரான்னு தெரியாது. வர்றவன் அப்படி செய்யலான்னா... எப்பப் பார்த்தாலும் என் பேரைச் சொல்- அவரு அப்படியெல்லாம் வேலை செய்வாரு... நீ என்னன்னா இப்படி இருக்கியேன்னு வந்தவனை சதா குற்றம் சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க.... ஆனா நான் இப்படி நடந்திக்குறதால இப்ப எல்லாரும் என் மேல வெறுப்பா இருக்காங்க. புதுசா வர்றவன் சின்ன வேலை செய்தாலும் அவனை எல்லாரும் பாராட்டுவாங்க. அதனாலதான் தம்பி....'' என்றார்.
"நல்லாருக்கு நீங்க சொல்றது நல்லவா இருக்கு.... வர்றவன் நல்ல பேரு வாங்குறதுக்காக, நீங்க ஏன் கெட்ட பேரை எடுக்கிறீங்க...?''
"என்ன பத்தி எத்தனை நாள் பேசப் போறாங்க.... வர்றவன்தானே இந்த ஆபிஸ்ல நீடிச்சிருக்கப் போறான்... எந்த விஷயமா இருந்தாலும் என் மனசாட்சிப்படி நடந்துகிறேன். இந்த விஷயத்தில நான் உறுதியா இருக்கேன். தயவு செய்து இதைப் பத்தி சோம வேற பேசலாமே...'' என்றார் கோபால்.
சுந்தரால் என்ன சொல்வதென்றே தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.
Sunday, 7 December 2008
மீண்டும் காதலிப்பேன்...
தபால்காரர் விட்டெறிந்துவிட்டுவிட்டுப் போன தபால்களை எடுத்துக்கொண்டு உள்ளே வந்தமர்ந்தான் ராஜா. ஒவ்வொன்றாக புரட்டிப்பார்த்துக் கொண்டு வந்தவன், கல்யாணப்பத்திரிகையை கண்டதும் அதிர்ந்தான். மணமக்கள் சாந்தி, கணேஷ்... என்றிருந்தது. சாந்தி என்ற பெயரைப் பார்த்ததும், பரபரப்பாகி பத்திரிகையை பிரித்தவன் உள்ளே மணமக்கள் புகைப்படத்தைக் கண்டதும், பத்திரிகையை எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஓடினான். அங்கே சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அசோக்கின் சட்டையைப் பிடித்து இழுத்து, அவன் முகத்துக்கெதிரே பத்திரிகையை நீட்டினான்.
"என்னடா இது.... என்னாச்சு உங்களுக்குள்ளே...'' என்று அதட்டினான்.
"எல்லாம் முடிஞ்சிடுச்சு...'' என்றவாறு முகத்தை திருப்பிக் கொண்டான்."எல்லாமேன்னா.... என்ன அர்த்தம்.... நீங்க காத-ச்சது எல்லாம் அவ்வளவுதானா... சே... நீ என் நண்பன்னு சொல்லவே வெட்கமா இருக்கு... நீ எதுவும் பேசவேணாம். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நான் பார்க்கிறேன்...'' என்றவாறு திரும்பியவனை அசோக் தடுத்து நிறுத்தினான்.
"இரு ராஜா.... அவசரப்படாதே... கல்யாணம் நல்லபடியா நடக்கனும். நீ என் நண்பன்னா எந்தவித இடைஞ்சலும் செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணு...'' என்றவாறு கையை நீட்டினான்.
"எதுக்குடா சத்தியம் பண்ணணும்.... உன்னை காத-ச்சுட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவ சந்தோஷமா இருப்பா. நீ தாடி வளர்த்துக்கிட்டு தேவதாசா திரிவியா...
"இந்த கல்யாணத்துக்கு அவளை சம்மதிக்க வைச்சதே நான்தான்டா....''"என்னடா சொல்ற... ''
"ஆமா ராஜா... ஏதோ இளமை வேகத்துல நாங்க காத-க்க ஆரம்பிக்கல. எனக்கு பிடிச்ச எல்லாமும் அவளுக்கும், அவளோட எண்ணங்கள், சிந்தனைகள் எல்லாம் எனக்கும் எவ்வளவோ ஒத்துப்போச்சி. அதுவே அவ மேல ஒரு ஈர்ப்பை உண்டாக்குச்சி. ஆனா கல்யாணம்னு வரும்போது.... ஒத்துவரலடா... எனக்கு கீழே ஒரு தங்கை இருக்கிற மாதிரி, அவளுக்கும் ஒரு தங்கை இருக்கா. எனக்கு இன்னமும் சரியான வேலை அமையல இந்த நேரத்தில அவங்க வீட்ல கல்யாணப்பேச்சை எடுப்பாங்கன்னு நாங்க எதிர்பார்க்கலை. அவளுக்கு சீக்கிரம் முடிஞ்சாதான் அவ தங்கைக்கு வரன் தேட முடியும்கிறதால அவங்க வீட்ல எடுத்த முடிவை எங்களால தடுக்க முடியலை. தண்டச்சோறு பட்டம் வாங்கிட்டு திரியுற என்னால என்ன செய்யமுடியும்.. எங்க காதல்தான்னு பெரிசுன்னு சுயநலம் எங்களுக்குள்ளே ம-ஞ்சகிடந்தா, நாங்க ஊரைவிட்டு ஓடிப்போயிருப்போமோ என்னவோ.... ஆனா நல்ல குடும்ப சூழ்நிலையிலே பாசத்தில வளர்ந்த எங்களுக்கு எங்க ரெண்டு குடும்பத்தையும் எதிர்க்க தோணலை... எங்களோட காதலால எங்களோட தங்கைகளோட வாழ்க்கை கேள்விக்குறியா மாற நாங்க காரணமா இருக்க கூடாதுன்னு முடிவு பண்ணோம். அதனால மனசொத்து பிரிஞ்சிட்டோம். அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா நிச்சயம் அவளையே கல்யாணம் செய்துக்க அந்த ஆண்டவன் ஒத்துழைப்பான்னு நம்பிக்கையோட இருக்கேன்...'' என்றவாறு கண்களில் வழியும் நீரைக் கட்டுப்படுத்த முயன்றான்.
"அழுடா.... நல்லா அழு... உன் சோகம் நெஞ்ச விட்டு போறவரைக்கும் அழுது தீர்த்திடு. உன்னையும் சாந்தியையும் தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சிடுடா. அடுத்த ஜென்மம் உனக்காக நிச்சயம் இருக்கனும்டா... அப்பவும் உன் நண்பனாவே நானும் பிறக்கனும்டா...'' என்றவாறு அசோக்கை இழுத்து அணைத்துக் கொண்டான் ராஜா.
