
2009ஆம் ஆண்டு விரைவில் பிறக்க இருக்கிறது. புத்தாண்டு பிறப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் போதும் இந்த ஆண்டாவது எல்லாருக்கும் நல்லவிதமாக அமையாதா? என்ற ஆசை அனைவருக்குமே தோன்றத்தான் செய்கிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விதமான நிகழ்வுகளை நமக்குத் தந்துவிட்டே செல்கிறது. சென்ற ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் நடந்த விபத்து இன்னும் கண்ணில் நிற்கிறது. காவல் துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு பல நிபந்தனைகள் விதித்து வருகின்றனர். அதை ஒழுங்காக கடைப்பிடித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே குடியும் கும்மாளமுமாகத்தான் கொண்டாட வேண்டுமா?சேவையுள்ளம் கொண்டோருடன் இணைந்து அன்னதானம் செய்வது, மரக்கன்றுகள் நடுவது, கண்தானம், ரத்த தானம் பற்றிய பரப்புரைகள் செய்வது, கவிராத்திரி நடத்துவது, நகைச்சுவை கிளப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று எவ்வளவோ மகிழ்ச்சியான வழிகளில் ஏதேனும் ஒன்றிணை மேற்கொள்ளலாம். அதை விடுத்து அன்னிய நாடுகளை பின்பற்றி நாமும் குடி, கூத்து என கும்மாளமிட்டு, சிலர் போதை மிகுதியால் விழுந்து அடிபட்டு இறந்து போவதும், சிலர் கை, கால்களில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும் தேவையா?நீங்கள் சிரித்தால் பக்கத்தில் இருப்பவர்களின் முகத்திலும் சிரிப்பு பற்றிக் கொள்ளும். இந்த ஆண்டு புன்னகை பூக்கும் புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!